இதுவொரு காலம், அதுவொரு காலம்!

அக்டோபர் 5, 2005 (23, டெல்·பர் கோர்ட், கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

சமயலறையில் பிரேமா, ரமணன், நான் மூவரும் இருந்தோம். அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டே பிரேமா பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் “ரமணா! அது ஒரு காலம்.” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள். அவ்வளவுதான். அதே இடத்தில், அதே நேரத்தில், ரமணனின் பின்வரும் பாட்டு (இசையுடன்!) பிறந்தது.
- ஆர்.எஸ்.மணி

***************************

  • இதுவொரு காலம்
    அதுவொரு காலம்
    அடியில் மணலாய்க் கரைகிறதே
    அதுதான் உண்மைக் காலம்

  • நினைவும் கனவும்
    புகையாய் நீளும்
    நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
    அதுதான் உண்மையில் வாழும்

  • எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
    அத்தனை முறையும் எழுந்தோம்!
    அதை நாம் ஏனோ மறந்தோம் - நிம்மதி
    அதனால்தானே இழந்தோம்

  • எத்தனை பெற்றோம் எத்தனை இழந்தோம்
    என்பதில் ஏதும் இல்லை - இங்கு
    ஏதும் மீதம் இல்லை- இதை
    இதயம் மறந்தால் தொல்லை

  • காயம் வலிக்கும்
    காலம் நடக்கும் - ஒரு
    மாலைப் பொழுதில் நினைக்கும் போது
    மனதில் எல்லாம் இனிக்கும் - சின்ன
    மலராய் நம் முகம் சிரிக்கும்

  • மனதை வென்றவன் எவனோ, அவனை
    மண்ணும் விண்ணும் வணங்கும் - அது
    மௌனத் தால்தான் கூடும் - கொஞ்சம்
    மறந்துவிட்டாலும் ஓடும்

  • உள்ளே உள்ளது வானம் - அதுவும்
    உள்ளம் விரிந்தால் தெரியும் - உன்
    உயிரே சிறகாய் விரியும்
    ஒற்றுமை என்பது புரியும்

  • தருவது தானம் - தன்னைத்
    தருவது தியாகம்
    தந்து மறந்தவன் மடியில் மகவாய்த்
    தவழும் ஞானம் யோகம்

*************